சற்றுமுன்

கனாக் கண்டேன் தோழி - கார்த்திகேயன் சுகதேவன் - சிறு கதை

ஸ்ரீவில்லிபுத்தூர் கந்தாடைத்தெருவில் வடபத்ரசாயி கோபுரத்துக்கு எதிரில் சத்யாவின் வீடு.

பத்து வயதில் “ஏன் பாட்டீ ஆண்டாளும் ரெங்கமன்னாரும் ஆடியிலே தேரில வர்றாங்க…”, என்பாள் சத்யா.


“லோகத்திலே உள்ள மனுஷாள்லாம்  க்ஷேமமா இருக்காளான்னு பார்த்து நலம் விசாரிச்சுட்டுப் போகத்தாண்டீ குழந்தே அவா ஆடியிலே தேரிலே வர்றா…”, என்பாள் பாட்டி ரங்கநாயகி.


“அப்போ தேரில வலம் வர்ற அவாகிட்ட, நாங்க இப்போ க்ஷேமமா இல்லை… எங்க அப்பா நிறைய குடிக்கிறா… எங்க அப்பாவுக்கு நல்ல புத்தி கொடுங்கோன்னு நான் கேட்டா ஸ்வாமி அனுக்ரஹம் பண்ணுவாரா..”
“ஓ... பண்ணுவாரே... பேஷா பண்ணுவார்... நன்னா வேண்டிக்கோ... கண்டிப்பா நல்லவழி காண்பிப்பார்...”, என்பாள் பாட்டி.
பாட்டி இறந்து வெகு காலமாகிவிட்டது. இன்னமும் சத்யா பாட்டி சொன்னதுபோல வேண்டிக் கொண்டுதானிருக்கிறாள். ஆனால் பகவான் இன்னமும் அவள் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லைதான்.... அவள் விண்ணப்பத்துக்கு கண் திறக்கவில்லைதான்... இருந்தாலும் சத்யாவுக்கு நம்பிக்கை இருக்கிறது...

அப்பா சரியாவாரென்று....
அவரது கண்ணையும் பகவான் திறந்து வைப்பாரென்று....
”கனவு இல்லாத உயிர் ஜடம்தான் சத்யா... கனவு காணணும்... அதுதான் வாழ்க்கைக்கு பலம் தரும். எந்த நம்பிக்கையில் மதுசூதன் வருவான்... கைத்தலம் பற்றுவான்னு கோதை நாச்சியார் கனவு கண்டா... ஆனா அவ கனவு பலிக்கலையா..?. அவளோட கனவு இன்று கொண்டாடப்படலையா... உன் பாட்டி சொன்னது போல உன் தோப்பனாருக்கும் நல்ல புத்தி வரும்டிம்மா... அதுதான் என்னோட கனவும் கூட... ” என்பாள் அம்மா.
பாட்டியும், அம்மாவும் கண்ட கனவு யுக, யுகாந்திரங்களையும் கடந்த பல பெண்களின் பலிதமாகாத கனவாக இருக்கலாம்...
பலிக்காது பாழாய்ப் போன பழம்கதைகளாகக் கூட இருக்கலாம்....
ஆனால், கனவுகளில் லயித்து... கனவுகளையே ருசித்து... கனவுகளையே சுவாசித்து... கனவை ஜெயித்தவளான ஆண்டாளை வணங்கும் போது தங்களது கனவும் பலிக்காமலா போய்விடும்....
ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தில்தான் வருடா வருடம் தேரோட்டம் நடக்கும்.
நாளை பூர நட்சத்திரம்...
எல்லே... இளங்கிளியேயென மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து கைத்தலம் பற்ற கனாக் கண்டவள் தன் மணாளனுடன் நாளை ஆடித் தேரில் பவனி வருவாள்.
கனவு பலித்த களிப்பில் வலம் வருபவள், கேட்டவர்க்கெல்லாம் கேட்டதைக் கொடுப்பாளாம்... கேட்காமலும் வேண்டியதைத் தருவாளாம்..
இந்த வருடத்திலாவது தங்களது கனவையும் ஜெயிக்க வைக்காமலா போவிடுவாள் அவள்.
குளித்து முடித்து, சாப்பாடு எடுத்துக்கொண்டு, அலுவலகத்துக்கு கிளம்பும் போது கிழக்கு ரத வீதியில் புறப்பாட்டுக்குத் தயாராக  நின்றிருந்தது ஆடித்தேர். சத்யாவுக்கு அந்த தேரைப் பார்த்ததும் மனதுக்குள் ஏதோவொரு தைரியம் உண்டானது. விளக்கு ஏற்றியதும் தெறித்து ஓடும் இருட்டைப்போல கவலைகள் இருந்த இடம் தெரியாமல் பறந்தது.
 நாளைய தினம் ஒட்டுமொத்த ஸ்ரீவில்லிபுத்தூரும் கோலாகலத்தில் திளைத்து மகிழப் போகிறது. பக்தியையும், சந்தோஷத்தையும் வாரியிறைக்கப் போகிறது.
சொல்லில் அடக்கி விட முடியாது அந்த தேர்த்திருவிழாவை... கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஒவ்வொரு ரத வீதிகளிலும் ஸ்வாமி தேரில் எழுந்தருளுவார்... பாட்டி சொன்னது போல அத்தனை மக்களையும் பார்த்து அவர் அன்போடு நலம் விசாரிப்பார். பஜனையும், கோலாட்டமும், கும்மியும் வரவேற்க ஆஜானுபாகுவான உயரத்தில் நிற்கும் தேரை கணக்கிலடங்கா சனம் வடம்பிடித்து இழுத்து வரும்... தெருக்களிலெல்லாம் புதிது, புதிதாகக் கடைகள் முளைக்கும். பத்து கிலோ, இருபது கிலோவென பால்கோவாக்கள் விற்பனையில் ஜொலிக்கும். நாராயணா.... நாராயணா... என்ற கோவிந்த நாம சங்கீர்த்தனம் அவ்வூரின் எட்டு திக்கும் விண்ணை முட்டும். அச்சப்தத்தை கேட்ட மக்கள் சொர்க்க வாசலில் நுழைந்ததாக லயித்துப் போவார்கள். அந்த கோஷத்தில் நெக்குருகித் திளைப்பார்கள்.
சத்யாவுக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். இப்போது போல அப்போது ’ புல்டோசர் ’ வைத்துத் தள்ளி ஒரே நாளில் முடிக்க மாட்டார்கள் இந்த தேரோட்டத்தை. பக்தர்கள் ஒன்று கூடி வடம் பிடித்து இழுக்க அங்குலம் அங்குலமாக நகரும் இந்த தேர். முடியாத பட்சத்தில் நெம்புதடி கொண்டு ஒரு கூட்டம் தேரை நகர்த்தும்.
அப்படியும் இழுக்க முடியாத தேர் ரத வீதிகளில் ஆங்காங்கே ஓரிரு நாள் நின்று இளைப்பாறிச் செல்லும். அப்படி தேர் இளைப்பாறிச் செல்லும் இரவுகளில் கருத்துப் பெருத்த மதயானையைப் போல நிற்கும் அந்த தேருக்கு அடியில் சிறுவர்களெல்லம் ஒன்று கூடி விளையாடும் கள்ளன் போலீஸ் விளையாட்டு… தேரின் வடத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஜங்கு, ஜங்கென்று குதித்துப் போடும் ஆட்டம்… ஆண்டாளையும் ரெங்கமன்னாரையும் மரப்பாச்சி பொம்மைகளாக அட்டைப் பெட்டியில் வைத்து தேரோட்டம் நடத்திய விளையாட்டு… இவைகள் அனைத்திலுமே சத்யாவும்  இருந்திருக்கிறாள்.
ஆனால் அவளோடு அப்போது ஆடிப்பாடி விளையாடிய குழந்தைகளெல்லாம் இப்போது நல்லபடியாக குடும்பம், குழந்தைகளென்று செட்டிலாகி விட்டார்கள். சத்யாதான் அவள் தகப்பனாரின் கெட்ட பழக்கத்தினாலும், பொறுப்பின்மையினாலும் இன்னமும் செட்டிலாகவில்லை.
தனியார் வங்கி ஒன்றின் கிளை அலுவலகம் அது. அங்குதான் சத்யா பணிபுரிகிறாள். அலுவலகத்துக்குள் நுழைந்த சத்யா ”அப்பாடா…” என தன் இருக்கையில் சாய்ந்தாள்.
“என்ன சத்யா அப்பாடான்னு சரிஞ்சு உட்கார்ந்துட்டே…” என்றாள் அவள் அலுவலகத் தோழி ரம்யா.
சத்யா பதிலேதும் பேசவில்லை.ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்தாள்.
“அழகுடீ உன் சிரிப்பு… எந்த மதுசூதன் வந்து உன்னை தூக்கிண்டு போகப் போறானோ…”என்றாள் ரம்யா.
“போவான், போவான்… முள்ளங்கிப் பத்தையா மூனு லட்சம் வச்சப்புறம்தான் என் நாத்தனாரே என் பொண்ணை தன் புள்ளைக்கு ஒத்துண்டா… இவ அப்பா அடிக்கற லூட்டிக்கு மதுசூதன் வருவான்… கைத்தலம் பற்றுவான்னு இவளும் ஆண்டாளாட்டம் கனவு கண்டுட்டே உட்காற வேண்டியதுதான்” என்றாள் அருகிலிருந்த கேஷியர் மாமி.
“ஏன் மாமி அவ வந்ததும் வராததுமா இப்படி தப்பாப் பேசறேள்…”, என்றாள் ரம்யா.
“சேச்சே… அவ என் குழந்தையப் போலடீ… அவளைக் காயப்படுத்த நினைப்பேனா… நான் உள்ளதைச் சொன்னேண்டீ….” என்றாள் கேஷியர் மாமி.
சத்யா அப்போதும் பதிலேதும் பேசவில்லை. ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்தாள்.
”அவ சொன்னது உண்மைதாண்டீ குழந்தே… கொள்ளை அழகுடீ உன் சிரிப்பு…” என்றாள் கேஷியர் மாமி.
அவள் மட்டுமல்ல... அவள் குடியிருக்கும் கந்தாடைத் தெருவும் அழகு... வீட்டு வாசலில் நின்றபடியே தரிசிக்கத் தோதுவாய் அமைந்த வடபத்ரசாயி கோவிலின் கோபுரமும் அழகு...
தமிழக அரசு சின்னத்தில் இடம்பெற்ற கோபுரமும்கூட இதுதான்.
திருமணமாகி கணவன் வீட்டுக்குப் போய்விட்டால் தினமும் காலையில் தரிசிக்க அந்த கோபுரமில்லாமல் போய்விடுமோவென பலமுறை கவலைப் பட்டிருக்கிறாள். அதற்காக திருமணமே ஆகாமல் இப்படியே இருந்துவிட்டால் கூட பரவாயில்லையெனத்தான் அவள் அடிக்கடி நினைப்பாள். ஆனால், உடனிருக்கும் இந்த கேஷியர் மாமி போன்ற  நலம்விரும்பிகள்தான் இப்படி அவள் கல்யாணத்தைப் பற்றியே அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள்.
என்ன செய்வது... முதிர்கன்னியாய் காலம் தள்ளுவதற்காக எதிர்த்துப் போராட வேண்டியது வயதுப் பிரச்சினைகளை மட்டுமா... சமூகத்தையும்தானே...
இருக்கையில் அமர்ந்ததும் அன்றாட அலுவலைத் தொடர்ந்தாள் சத்யா. காசோலையை போட்டு பணம் எடுக்க வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்தும்; கேஷ் டெபாசிட் செய்ய வந்தவர்களுக்கு டெபாசிட் ஸ்லிப் கொடுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளராக மாமியிடம் அனுப்பி வைத்தாள். பணம் எடுக்க வந்தவர்களுக்கும், செலுத்த வந்தவர்களுக்கும் மாமியே டெபிட் அண்ட் க்ரெடிட் என்ட்ரியும் போட்டு பணப்பட்டுவாடா செய்து அனுப்பினாள். அக்கவுண்ட் சம்பந்தமாக சந்தேகம் கேட்டு வந்தவர்களுக்கு இடையிடையே ஆலோசனைகளும் கூறிக்கொண்டிருந்தாள். வேலை சிரமமில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் வந்தான்.
அட்டைப் பெட்டி தேரோட்டம்… தேரின் வடத்தில் ஏறி உட்கார்ந்து ஆடும் குதிரை சவாரி ஆட்டம்… கள்ளன் போலீஸ் விளையாட்டு… இவைகள் எல்லாவற்றிலும் அவளோடு சேர்ந்து விளையாடிய அவளது பால்ய வயது சினேகிதன் சேஷாத்திரிதான் அது. அவள் குடியிருக்கும் அதே தெருவில் கோபுரத்துக்கு வலப்பக்கம் இவள் வீடென்றால், இடப்பக்கம் அவன் வீடு. கையில் ஒரு தடி, கண்ணுக்கு கருப்பாக மூக்குக் கண்ணாடி, மடிப்பு கலையாத அரைக்கை சட்டை, கீழே தொள, தொளவென்று ஒரு கால் சராய் சகிதமாக வந்து நின்றிருந்தான்.
பார்த்த மாத்திரத்திலேயே அவன் பார்வையற்றவனென்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
சிறுவயதிலேயே அவனுக்கு கண்பார்வை குறைவுதான். எதுவும் மங்கலாகத்தான் தெரியும். மாலை நேரத்தில் அது சற்று அதிகமாகிவிடும்.
முன்பே சொன்னது போல நெம்புதடி கொண்டும் நகர்த்த முடியாது இரவு நேரத்தில் ரத வீதிகளில் இளைப்பாறும் தேரிலிருக்கும் ஸ்வாமிகளுக்கு பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் பூஜைகள் நடக்கும். அந்த நேரத்தில் சுற்றியிருக்கும் வேறு எதுவும் தன் கண்களுக்கு சரியாகத் தெரியவில்லையெனச் சொல்லும் சேஷாத்திரி, உயரமாக தேரின் மீது பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் பூஜையிலிருக்கும் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் மட்டும் சொர்க்கத்திலிருந்து எட்டிப் பார்ப்பது போலிருப்பதாகச் சொல்லுவான்.
பாவம். இப்போது அவனது கண்பார்வை முற்றிலுமாகப் போய் விட்டதாம். வடக்குரத வீதியில் முன்பு சுந்தரம் காஃபே இருந்த இடத்துக்கு அருகே எஸ்டிடி பூத் வைத்து நடத்திக் கொண்டிருந்திருக்கிறான் போல. இப்போது கை பேசி அதிகமாகிவிட்டதால் வரும்படி அவ்வளவாகஇல்லையாம். பூத் இருந்த இடத்தில் ஒரு மளிகைக் கடை வைப்பதற்கு லோன் கேட்டு வந்திருந்ததாக சத்யா அருகே அழைத்து விசாரித்த போது சொன்னான்.
“சாதரணமா உன்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் அக்கௌண்ட் ஓப்பன் பண்றதுக்கே ஏகப்பட்ட ஃபார்மாலிட்டீஸ் இருக்கு இங்கே… உனக்கு லோன் தருவாங்களா, இல்லையான்னு என்னாலே அவ்வளவு உறுதியா சொல்ல முடியாது சேஷூ…” என்றாள் சத்யா.
“சரி பரவாயில்லை… எங்களைப் போன்றவங்களுக்கு லோன் தர்றதுக்கும் சில நிறுவனங்கள் இருக்கு… நான் அங்கே போய் முயற்சி பண்ணிக்கறேன்…” என்றான் சேஷாத்திரி.
அவனொன்றும் இல்லாதவனில்லை. அவன் தோப்பானார் ஹிண்ட் ஹை ஸ்கூலில் சயன்ஸ் வாத்தியாராக இருந்து நிறைய காசு சேர்த்து வைத்துள்ளார். அந்தக் காலத்திலேயே அவர் புல்லட்டில்தான் பள்ளிக்கு வருவார். அவ்வளவு செல்வாக்கான மனிதர் அவர். ஆனால் பசங்கதான் அவருக்கு புள்ளிக் கோவிந்தனென்று செல்லமாக பெயர் வைத்து ரகசியமாக சொல்லி மகிழ்வார்கள். முகமெல்லாம் புள்ளிப் புள்ளியாக அம்மைத் தழும்போடு, அவ்வளவு எளிமையாக... அனாயசமாக பாடம் நடத்தும் நல்ல ஆசிரியர் அவர். அவர் சேர்த்துவைத்த சொத்து, பத்துகளிருக்கும் போது அவனுக்கு இந்த வங்கி உதவிப் பணம் ஒன்றும் பெரிதாகத் தேவையேயில்லைதான்.
ஆகவே வங்கி உதவாவிட்டாலும் அவனுக்கு அதனால் எந்த இழப்பும் வரப் போவதில்லை. எனவே அக்கவலையை விட்டு அடுத்து பேச ஆரம்பித்தாள் சத்யா.
"இது பிறவியிலேயே ஏற்பட்ட பிரச்சனையில்லையே... சரியான ட்ரீட்மெண்ட் எடுத்தா சரியாயிடுமே சேஷூ...”.
“உண்மைதான். ட்ரீட்மெண்ட் கொடுக்க அப்பா நிறைய காசு சேர்த்து வச்சுருக்கார். ஆனா, இருந்து கொடுக்கத்தான் அவரில்லாம போயிட்டாரே. அம்மாவுக்கும் உடம்பு அவ்வளவு சுகமில்லை... இதிலே எப்படி நான் ட்ரீட்மெண்டுக்குப் போறது... சொல்லு...”
“ரிலேட்டிவ்ஸ்...?”
“அக்காவும், அத்திம்பேரும் இருக்கா... எனக்கு சரியாயிட்டா வரப் போற சொத்திலே அவாளுக்கு ஒரு ஷேர் குறைஞ்சுடுமோல்லியோ...”
“அட நாராயணா... இப்படியும் இருப்பாளா...:
“அக்கா அழத்தான் செய்யுறா...ஆனா அவ மட்டும் என்ன செய்வா...”
“ ............................................................... “
“ நம்ம ஃப்ரெண்ட்ஸ் மகேஸ்வரி, கோமதி, பொன்ராசு, நாகராசெல்லாம் எப்படி இருக்காங்க… நீ சமீபத்துல அவங்களை பார்த்தியா… சௌக்கியமா இருக்காங்களா… “ என்றான்.
“ம்ம்.. பார்ப்பேன்… மகேஸ்வரி எங்க பேங்கிலே அக்கௌண்ட் ஹோல்டர். அடிக்கடி இங்கே வருவா… அவ பையன் ஃபோர்த் படிக்கறான்… உன்னைப் பற்றிக் கூட கேட்பாள்… ஆனா வொர்க்கு பிஸியிலே ரொம்ப நேரம் அவளோட பேச முடியாது…” என்றாள்.
“நீ எங்கே... பத்துவீடு தள்ளியிருக்கற என்னைப் பற்றியே பேங்குல வச்சுத்தான் விசாரிக்கிறே...”
“என்னடா சேஷூ பண்றது... வீட்டுக்குப் போனா பேங்க் எக்ஸாம்ஸுக்கு ப்ரிப்பரேஷன்... இங்க வந்தா சொந்த வேலை எதையும் கொஞ்சமும் யோசிக்க முடியாதபடிக்கு வேலை... அப்படியே எதாவது டைம் வேஸ்ட் பண்ணினாலும் மேனேஜர் கூப்பிட்டு திட்டுவார்...”, என்றாள்.
ஆனால், அவன் அது தனக்காகவே சொல்லப்பட்டதோவென சட்டென சுதாரித்துக் கொண்டான்.
“சாரி..சாரி… வொர்க்குல பிஸியா இருப்பே… உன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது… நான் கிளம்பறேன்…” என்றான்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை… பிஸி ஷெட்யூல்னுதான் சொன்னேன். உன்னைப் போகச் சொல்றதுக்காகச் சொல்லலை…”என்றாள்.
அவளது அலுவலகத் தோழி ரம்யா அவளையும் அறியாமல் சப்தமாக சிரித்துவிட்டாள், அவர்களது அந்த சம்பாஷணையக் கேட்டு.
கேஷியர் மாமியும் கூட தன் பணியை மறந்து “என்ன?..” என்பது போலப் பார்த்தாள்.
ஆனால் அப்படியே அவன் கிளம்பி விட்டால் கூடத் தேவலை.” நீ எப்படி இருக்கிறே… உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கறாளா… எப்போ கல்யாணம்…” என்று கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது என சத்யாவுக்கு அந்த ஹாஸ்யத்தை ரசிக்க முடியவில்லை. மனம் விட்டு சிரிக்க முடியவில்லை.
“வாயினால் பாடி மனதினால் துதிக்க… போய பிழையும் புகுதருவான்  நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்…” என்று முணு,முணுத்தாள்.
“என்ன முணு,முணுக்கிறே…”
“ஒன்னுமில்லை… திருப்பாவை… கஷ்டமான  நேரத்திலேயெல்லாம் சொல்லிப்பேன்…”
“ம்ம்… அப்படின்னா இப்போ எதாவது கஷ்டமாயிடுச்சா…”
“இல்லை சேஷூ … ஒரு என்ட்ரி தப்பாப் போட்டுட்டேன்…”
“அடடா… என்கூடப் பேசிக்கிட்டே நீ தப்பு விட்டுட்டியா…”
“அதெல்லாம் ஒன்னுமில்லை… சரி சேஷூ … உனக்கு எதாவது செய்ய முடியுமான்னு அப்புறமா மேனேஜரைக் கேட்டு ஃபோன்ல சொல்றேன்…” என்றாள்.
“சரி…” என்றான் சேஷாத்திரி.
“ஒகே..”என்றாள், புறப்படு என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக.
ஆனால் அவன் “அப்புறம் ஒரு விஷயம்…” என்றதும் பதைத்துப் போனாள், அடுத்து அவன் தன்னைப் பற்றித்தான் கேட்கப் போகிறானோ… என்ற நினைப்பில்.
ஆனால் அவன் அவளைப் பற்றி விசாரிக்கவில்லை. அவளுக்கான அந்த தகவலை மட்டும் சொன்னான்.
“சேவையைச் செய்து தேவையைப் பூர்த்தி செய்யத்தான் இந்த மாதிரி மையங்கள்... அதை சரியா செய்தாலே நல்லா வரலாம் சத்யா. ஆனா அதையெல்லாம் விட்டுட்டு பிஸினசை டெவலப் பண்ண ஏகப்பட்ட எக்ஸிக்யூட்டிவ்கள்… ஏகப்பட்ட ஃபோன், எஸ்எம்எஸ் கேன்வாஷ்கள்… அதை பண்றவாளுக்கு ஊதியங்கள்ன்னு  நிறைய செலவு பண்றாங்க… எதுக்கு இதெல்லாம். நம்மோட வாழ்க்கை கூட அப்படித்தான் சத்யா… நாலு பேருக்கு நல்லது செய்ததுக்கு அப்புறமாத்தான்  நாமளும்  நமக்கு  நல்லது நடக்கணும்னு எதிர்பார்க்கணும்… ஆனா யார் செய்யறா… “என்றான்.
பொட்டிலடித்தது போலிருந்தது அவன் சொன்னதைக் கேட்டதும். அவளுக்கான ஏதோ ஒரு சங்கதி அந்த வார்தைகளில் இருந்ததை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
என்ன ஒரு அற்புதமான வார்த்தை… இவனுக்கா கண்ணில்லை… எத்தனை விஷயங்களைப் பார்த்து வைத்துள்ளான்… எவ்வளவு தெளிவாகப் பேசுகிறான்.
மூலப்பிரக்ருதியாக மேலிருந்து காப்பவன் விரித்து வைத்துள்ளான் எல்லாவற்றையும். தெரிந்து கொள்ளத்தானே ஐம்புலன்களையும் கொடுத்தான். பார்க்காது போய் விட்டோமே…
சத்யா சிலையாகிப்போனாள்.
“என்ன சத்யா… நான் சொல்றது சரிதானே…?” என்று அவளை உசுப்பியது சேஷூவின் அடுத்த கேள்வி.
“ம்ம்…”என்றாள் ஒற்றையாக.
“சரி வர்றேன் சத்யா… “எனக் கிளம்பினான் சேஷூ.
அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்ல சத்யாவுக்கு.
ஏன் அப்படி செய்யக் கூடாது...
அவனொன்றும் பிறவி ஊனமில்லையே....அவன் ஊனத்தைப் போக்கிக் கொள்ள உதவி செய்ய ஆளில்லாமல்தானே தவிக்கிறான்.
பரந்து கிடக்கும் நீர் பிரவாகத்தில் எனக்கு குடிநீர் கிடைக்கவில்லையென ஒரு நண்பன் புலம்புவதை எப்படி கேளாமல் போகலாம்.
ஒரு பிடி அவலுக்காக தன் நண்பனின் வாழ்வையே மாற்றினானே பரந்தாமன்...
நட்பு எவ்வளவு புனிதமானதொரு விஷயம்....
என் நணபன் தவிக்கும் போது சேவையாற்றத் தெரியாத நான் எப்படி என் கனவு பலிக்க ஆண்டாளிடம் கேட்கலாம்...
“கொஞ்சம் இரு சேஷூ …”என்றாள் சத்யா.
“என்ன?..”
“நீ கல்யாணம் பண்ணிக்கலாமே... மனைவி வந்து உன்னை பார்த்துப்பாளே... ”
“எனக்கு கூட ஆகுமா சத்யா… இருட்டில நிக்கற நான் இன்னொரு ஜீவனுக்கு எப்படி வெளிச்சம் காட்ட முடியும்… என்னோட சுய நலத்துக்காக பிறத்தியாரையும் இருட்டிலே கொண்டுபோய் நிறுத்தலாமா... அது மகா பாவமில்லையா...”
யார் இருட்டில் உள்ளார்கள். இருளென்பது குறைந்த ஒளியே. நல்லது செய்து, நல்லதே நினைக்கும் இடத்தில் எங்கிருந்து வரும் காரிருள்.
“ நல்லதைச் செய்து  நல்லதை எடுத்துக்க  நான் தயாராயிட்டேன் சேஷூ… உனக்கு வெளிச்சம் காட்டி பார்வை கொடுக்க எனக்கு சம்மதம். உனக்கு சம்மதமா?...” என்றாள்.
சேஷூ வாயடைத்துப் போனான். சத்யாவின் தகப்பனார் பற்றியும், அதனால் அவள் இன்னமும் திருமணமே ஆகாமல் இருப்பதும் அவனுக்கு முன்பே தெரியும். அதற்காக அவள் இப்படி எடுத்தோம், கவிழ்த்தோமென்று பேசியிருப்பாளோ…
யார் மீதோ இருக்கும் கோபத்துக்கான தண்டனையை தன் தலையில் போட்டுக் கொள்கிறாளோ… என யோசித்தான். ஆனால் அவன் யோசித்ததற்கு பதில் சொல்லும் விதமாகவே அவள் மேலும் சொன்னாள் -
“உண்மையாச் சொல்றேன்… இயலாமையாலோ..., வேற யாரு மேலயோ உள்ள கோபத்தினாலோ நான் இந்த முடிவை எடுக்கலை… இது சுயமா  எனக்கு  நியாயம்னு பட்ட முடிவு… உனக்கு சம்மதமா சொல்லு…” என்றாள்.
கேஷியர் மாமியும், அலுவலகத் தோழி ரம்யாவும் உறைந்து போய்ப் பார்த்தார்கள்.
கேஷியர் மாமி அப்போதும் “பாவம் இந்த குழந்தை…” என்ற பார்வையைத்தான் பார்த்தாள். சத்யாவின் தோழி ரம்யாவும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான் நினைத்தாள். ஆனால் சத்யா அப்படி நினைக்கவில்லை. மிகத் தெளிவாகவே அடுத்து பேச ஆரம்பித்தாள்.
மறுவருடம் அதே பூர நட்சத்திரத்தில், பாவை பாடிய பாவை பிறந்த புண்ணியஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆடித்தேர் வீதியில் உலா வந்தது.
சேஷூவுக்கு பார்வை கிடைத்தாயிற்று. தான் செய்த தவறுகளால்தான் தன் மகளுக்கு இப்படி ஆகிவிட்டதோ என்ற குற்ற உணர்வில் சத்யாவின் தோப்பனாருக்கும் கூட எப்போதோ நல்ல பார்வை கிடைத்திருந்தது. இவ்வருடமும் ஆடியில் வீதியில் உலா வந்த ஆண்டாளும் ரெங்கமன்னாரும் இப்போது சத்யாவின் தோப்பனாரையும் சொர்க்கத்திலிருந்து எட்டிப் பார்ப்பதைப் போல தேரின் உச்சியிலிருந்து உற்றுப்பார்த்தார்கள்.
சத்யாவும் தன் ஆசைப்படியே திருமணத்திற்குப் பின்னும் தினமும் காலையில் வடபத்ரசாயி கோபுரத்தை தரிசிக்கிறாள். ஆனால் கோபுரத்தின் வலப்பக்கத்திலிருக்கும் அவள் வீட்டிலிருந்தல்ல. இடப்பக்கத்திலிருந்த அவளது கணவன் சேஷுவின் வீட்டிலிருந்து...
ஆம்.அவளின் கனவு பலித்தது!.

tamil short story about love of teenge boy in th temple town village in tamilnadu india by karthik sugudevan

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.