சற்றுமுன்

காந்தி உண்மையாக மனம்விட்டு சிரிப்பார்

அறவழிப் போராட்டமென்றால் என்ன?. மானுடம் வாழ வேண்டும். தான் சிந்திய ரத்தத்தை தனது கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவரும்கூட எவ்விதத்திலும் சிந்தவிட்டு விடாமல் தனது கருத்தை வலியுறுத்த வேண்டும். கத்தியின்றி, ரத்தமின்றி தனது உரிமையை போராடி நிலைநாட்ட வேண்டும் என்பன போன்றவைகளே அறவழிப் போராட்டம்.

இதை எப்படியெல்லாம் நடத்தலாமென்பதற்கு பல முறைகள் உள்ளது. இதற்கு மிக நீளமான பட்டியலே உள்ளது ( *  நிறைய தகவல்கள் வேண்டுவோர் இந்த இணையதள முகவரிக்குச் சென்று பாருங்கள் : http://www.aeinstein.org/nonviolentaction/198-methods-of-nonviolent-action ).

இப்போராட்டத்திற்கு கடிதங்கள், விளம்பர சுவரொட்டிகள், ஒத்துழையாமை, உண்ணாவிரதம், இன்னும் எவ்வளவோ உள்ளது. அப்படித்தான் நரைகூடி கிழப்பருவமெய்தினாலும் நான் வீழ்ந்திடுவேனென்று எண்ணினாயோ என்று தன் சீரிய கவிதை வரிகளால் சுதந்திரப் போர் புரிந்தான் பாரதி.
ஆம். எழுத்திலும், கலை, இலக்கியத்தின் வழியிலும்கூட எத்தனையோ வீரர்கள் அன்று அப்போர் புரிந்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மாபெரும் யுத்தத்தைத்தான் நமது தமிழ் இளைஞர்கள் இன்று கையிலெடுத்துள்ளார்கள்.குமரி முதல் கூடிய இந்த அறப்போராட்டக் கூட்டம் தமிழகத்தின் எல்லையையும் தாண்டி புதுதில்லிவரைக்கும் கூட நீளுமென்ற அறிவிப்பை சொன்னதும் பல அரசியல்வா(வியா)திகள் ஆடிவிட்டர்களென்பது உண்மை.

கடல்கடந்தும் பல நாடுகளிலிருந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தமிழ்மக்கள் தங்களது உணர்வுபூர்வமான பதிவை ஊடகங்கள் வாயிலாகவும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் பதிவு செய்துள்ளார்கள். அரபு நாடுகள், அமெரிக்கா, இலங்கை, இங்கிலாந்து போன்ற இன்னும் பல நாடுகளில் இன உணர்வோடு இத்தமிழ் சமூகம் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய இனம் எங்கள் இனமென்று இவர்கள் (தமிழர்கள்) இறுமாப்புடன் சொல்ல, உலகமெங்கும் காட்டுமிராண்டிகளாக விரவிக்கிடந்த முதல் சமூகம் இத்தமிழ்சமூகமென சரித்திரமே சான்றளிக்கிறது. இதில் மனதை உருக்கும் விடயம் என்னவென்றால் காட்டுமிராண்டிகளாய்க் கிடந்தவர்களே தங்கள் போர்க்குணம் துறந்து அமைதிவழியில் அறப்போர் செய்வதுதான்.

நெஞ்சு நெகிழ்கிறது. சுற்றியிருந்து சாட்சி சொல்லும் வங்கக்கடலும் அலையெனத் திரண்ட தமிழ் உள்ளங்களின் கணக்கிலடங்கா கூட்டத்தை கண்டு மிரண்டு போகிறது. இனி, ஒவ்வொருமுறை மெரீனா செல்லும்போதும் “இங்குதானே அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறப்போராட்டம் நடந்ததென்றுதான்” ஒவ்வொரு மனிதனும்  நினைத்துப் பார்ப்பான்.
ஹென்றி டேவிட்,  மகாத்மா காந்தி, நெல்சன் மாண்டேலா, மார்ட்டின் லூதர்கிங், தலாய் லாமாவென இன்னும் பல தலைவர்கள் முன்னிருந்து நடத்திச் சென்றது இந்த அறவழிப்போராட்டம்.

அறவழியில் போராடி வெற்றிகண்ட பிற தேசங்கள் இவ்வழியை இந்தியாவில் மகாத்மா காந்தியிடமும், கோடிக்கணக்கான இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்களிடமிருந்தும் கற்றுக் கொண்டதாக நெகிழ்ந்து போய்ச் சொல்லுகின்றன.

ஆனால் சொல்லிக்கொடுத்த இந்த பூமியே அதை மதிக்கவில்லை. இன்னமும் உறக்கம் கலையாமல் மவுனம் சாதிக்கின்றது.
”கட்டுப்பாடற்ற உறவுகொள்ள விருப்பமுள்ளவர்கள் வரலாமென கூறினாலும் ஐம்பதினாயிரம் பேர் இந்த மெரீனாவில் கூடுவார்களெ”ன்று வெட்கமேயில்லாமல் கூறிய ஒரு மூதாட்டியின் நாகரீகமற்ற பேச்சைக் கேட்டும் அமைதியாகவுள்ளது. பிறகு பேசியதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்கிறது அம்மூதாட்டி.

’பனி சிந்தும் இரவுகளும், பசி கொடுத்த இன்னல்களும் துளியாய் மறைந்து போகும் வரும் தீர்ப்பினாலே’ என அமைதியாய் பொறுமையுடன் காத்திருக்கும் எம் மக்களுக்கு அவசர சட்டம் கொண்டுவர இவ்வளவு காலமா. ஏன்?. எதற்காக இந்த தாமதம்?. நிரந்தர தீர்வு எங்களுக்கு உடனே வேண்டும்.
அமைதியாக வாழும் எங்கள் பூமியில் குழப்பங்கள் விளைவித்த பீட்டா அமைப்பினரை அவர்களது நாடுகளில் அசைவ உணவுகளை எதிர்த்து வழக்குகள் போட அனுப்பி வைக்க வேண்டும் நமது அரசு. அதை விடுத்து இனியும் அவர்கள் இங்கு தங்களது இருப்பை தொடரக் கூடாதென்று வலியுறுத்த வேண்டும்.

ஆம். வந்தாரை வாழ வைப்பதுதான் தென்னகமெனினும், இதுவும் ஒருவகையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போலத்தான்.
அறப்போரினால் ஆவது ஒன்றுமில்லையென கோடியில் ஒருவர்கூட எண்ணிவிடாமலிருக்க உடனே இப்போராட்டம் வெற்றி பெற வேண்டும்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை, சர்வேசா கண்ணீராலன்றோ காத்தோம் என பாரதி பாடிய பாடல் வரிகளின் அர்த்ததை மீண்டும் ஒருமுறை நம் இந்திய மக்கள் புரிந்து கொள்ளவொரு சந்தர்ப்பமாய் இதை மாற்றித் தர வேண்டும். அறவழியில் நின்று அன்று நம் தேசம் கடந்துவந்த பாதைகளுக்கு மதிப்பளிக்க இப்போராட்டத்துக்கு உடனே வெற்றியை உறுதி செய்யவேண்டும். அது வரக்கூடிய நமது குடியரசு தினத்தில் நம் உன்னத தலைவர்களுக்கும்  நமது சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையே.

அப்படிச் செய்வதால், ரூபாய் நோட்டுகளில் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியனது உள்ளத்திலும் காந்தி உண்மையாக மனம்விட்டு சிரிப்பார். அவரை சிரிக்கவிடுங்கள்.

````கார்த்திகேயன் சுகதேவன்````

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.